Thursday 26 September 2019

கால் டாக்சி டிரைவர் பெண்ணிடம் செய்த அராஜகம்


முன்பெல்லாம் நடுத்தர வர்க்கத்தினர் எங்காவது பயணம் செய்ய வேண்டுமென்றால் அவர்களுக்கு நன்கு தெரிந்த, பழக்கமான அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே உள்ள ஆட்டோ டிரைவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு அவருடைய ஆட்டோவில் பயணம் செய்து வந்தனர், ஆனால், ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு மக்களிடம் அதிகரித்த பின்பு தனியார் கால் டாக்ஸி  ஆப்கள் மூலம் கால் டாக்ஸி புக் செய்து பயணிப்பது சகஜமான விஷயமானது, நியாயமான கட்டணம், கிட்டத்தட்ட ஆட்டோவில் பயணம் செய்யும் அதே செலவிலேயே அலுங்காமல் குலுங்காமல் சொகுசாக காரில் பயணம் என்றால் யார் தான் கால் டாக்ஸியை பயன்படுத்தாமல் இருப்பார்கள்? 


சமீபத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம் பெண்கள் கால் டாக்ஸியை நம்பி புக் செய்து பயணிக்கலாமா? என்று அச்சத்தை ஏற்படுத்துகிறது, குழந்தையுடன் இரவு நேரத்தில்  தனியார் கால் டாக்ஸியில் பயணம் செய்ய வந்த ஒரு பெண்ணிடம் கால் டாக்ஸி டிரைவர் கோபமாக பேசி அவரை தன் காரை விட்டு கீழே இறங்க சொல்லி வற்புறுத்தும் காட்சி வாட்ஸ் அப்பில் வேகமாக பரவி வருகிறது, இந்த காணொளி காட்சியை பார்க்கும்போது  காரில் பயணம் செய்ய வந்த பெண் பயணி தனியார் கால் டாக்ஸி டிரைவரிடம் ஏன் தாமதமாக வந்தீர்கள்? என்று கேட்டிருக்கக் கூடும் என்று தோன்றுகிறது, அந்த கேள்விக்கு பின்பு கால் டாக்ஸி டிரைவர் ஆவேசமாக குழந்தையுடன் பயணிக்கும் பெண் என்றும் பாராமல் அந்த பயணியை கீழே இறங்க சொல்லும் காட்சி (பயணியால்) படம்பிடிக்கப்பட்டுள்ளது. 

கால் டாக்ஸி டிரைவர்கள் எல்லோருமே இப்படிப்பட்டவர்கள் இல்லை, எனக்கு தெரிந்து பயணிகளை மரியாதையுடன் நடத்தும் எவ்வளவோ நல்ல குணமுடைய கால் டாக்ஸி டிரைவர்கள் இருக்கிறார்கள், ஆனால் இது போன்று பயணிகளை உதாசீனப்படுத்தி கேவலமாக நடத்தும் ஒரு சில டிரைவர்களால் தான் மொத்தமாக எல்லா டிரைவர்களும் இப்படிதான் இருப்பார்களோ? என்ற தவறான எண்ணம் மக்கள் மனதில் விதைக்கப்படகூடிய வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட கால் டாக்ஸி நிறுவனம் இது போன்று நடக்கும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்நிலை மாறும்.
-----------------------------------------

---------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------------------------- -----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Wednesday 31 January 2018

பெற்றோர்களா? அரக்கர்களா?

 பிள்ளைகளிடம் அதிக கோபம், அதிக செல்லம் - இரண்டுமே ஆபத்து 


திக செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைகள், பிற்காலத்தில் சமூகத்தில் மிக மோசமான மனிதர்களாக மாறி விடுகிறார்கள், அதனால் சிறு பிள்ளைகள் தவறு செய்யும்போது அவர்களை கண்டிக்காமல் இருக்க முடியாது, ஆனால் அவர்களை கண்டிக்கும் போதும் தண்டிக்கும் போதும் அவர்கள் உடலும் மனமும் அதை தாங்குமா என்பதை சிந்தித்து கண்டிப்பது 
அவசியமாகிறது. 

மண்ணில் விளையாடி உடைகளை அழுக்காக்கியதற்காக - ராஜஸ்தானில் பிள்ளையை கயிற்றில் தொங்க விட்டு அடிக்கும் தந்தை  


பிள்ளைகளை மிருகத்தனமாக அடித்ததற்காக இந்த பாசமிகு தந்தை இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சில வீடுகளில் பெற்றோர் பிள்ளைகளை மிருகங்களை நடத்துவது போல், அடித்து துவைத்து எடுக்கின்றனர். அதில் ஒரு சில சம்பவங்கள் மட்டும் காணொளி காட்சியாக படம்பிடிக்கப்பட்டு  தொலைகாட்சிகளிலும், சமூக வலை தளங்களின் மூலம் வெளி உலகுக்கு தெரிந்து வைரல் ஆகி வருகிறது, அந்த பாசக்கார பெற்றோர் மேல் சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ள படுகிறது, 

அதிக செல்லம் கொடுத்து பிள்ளைகளை கெட்டு போக செய்யும் பெற்றோர் ஒரு புறம், இன்னொரு புறம் இது போன்று தங்கள் மொத்த கோபத்தையும் சேர்த்து வைத்து பிள்ளைகள் மீது காட்டும் பெற்றோர். இந்த இரண்டு வகை பெற்றோருமே தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கெடுத்து விடுகின்றனர்.

பெங்களூரில் பொய் சொன்னதற்காக பிள்ளையை அடித்து துவைக்கும் தந்தை


அதிக செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் பிள்ளைகள் எதிர்காலத்தில் யாருக்கும் அடங்காதவர்களாக சமூகத்தில் பொல்லாதவர்களாக மாறுகிறார்கள், அதே போல் அதிக கண்டிப்பும், தண்டனைகளும் அனுபவிக்கும் பிள்ளைகள் எந்த ஒரு விஷயத்தையும் பெற்றோர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் வெளியில் சில தீய நட்புகளை உருவாக்கி கொண்டு பொல்லாதவர்களாகவோ அல்லது கசப்புகளை தங்கள் மனதுக்குள்ளேயே வைத்து புழுங்கி எந்த ஒரு விஷயத்தையும் துணிவுடன் செய்யும் ஆற்றல் இல்லாத கோழைகளாகவோ மாறி விடுகின்றனர். 

உணவை கீழே சிந்தியதற்காக பிள்ளையை அடித்து துவைக்கும் ஆயா


அமெரிக்கா, கனடா போன்ற மேலை நாடுகளில் சிறு பிள்ளைகளையும் பெற்றோர் பெரியவர்களை போல் மரியாதை கொடுத்து நடத்துகிறார்கள், இது சிறு பிள்ளைகள தங்கள் பெற்றோர்களை நண்பர்கள் போல் நினைத்து தங்கள் வாழ்வின் தினசரி நிகழ்வுகளையும், தங்கள் சிந்தனைகளையும் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ள செய்கிறது. இதனால், பெற்றோர்கள் தங்கள்  பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே சரி எது, தவறு எது என்று போதித்து விடுகின்றனர், பிற்காலத்தில் அந்த பிள்ளைகள் வாழ்வில் முக்கிய முடிவுகளை எடுக்கும் போது அவர்கள் சுயமாக சிந்தித்து சரியான முடிவுகளை எடுக்கும் ஆற்றலை பெற்று விடுகின்றனர். சில வேளைகளில் தவறான முடிவுகளை எடுத்தாலும் அதனால் வரும் விளைவுகளை எதிர்கொள்ளவும், எதிர்காலத்தில் சரியான முடிவுகளை எடுக்க தங்கள் தவறுகளிலிருந்தும் கற்று கொள்கின்றனர். 

பிள்ளைகளை வளர்ப்பதில் மேல் நாட்டினருக்கும் 
நமக்கும் உள்ள வித்தியாசம் சொல்லும் காணொளி காட்சி 


அதிக செல்லம் கொடுத்து பிள்ளைகளை வளர்ப்பது எவ்வளவு ஆபத்தோ, அதே போல் அதிக கண்டிப்பும் ஆபத்தே, இனி வரும் காலங்களிலாவது சிறு பிள்ளைகளை பெற்றோர், கனிவு கலந்த கண்டிப்புடன் நடத்தி அவர்கள் வருங்கால வாழ்க்கை சிறக்க செய்யுங்கள். 
-----------------------------------------

---------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------------------------- -----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Sunday 21 January 2018

மாணவர்கள் உயிரை குடிக்கும் தண்டனைகள் தேவையா?


மாதா, பிதா, குரு, தெய்வம் என்று நம் முன்னோர்கள் மதிப்பு கொடுக்க வேண்டிய வரிசையில் பெற்ற தாய், தந்தைக்கு அடுத்து நண்பனையோ, வேறு உறவுகளையோ வைக்காமல் கல்வி கற்று தரும் ஆசிரியரை வைத்திருப்பதில் இருந்து அந்த பணியின் மதிப்பை நாம் புரிந்து கொள்ளலாம். சென்ற வாரத்தில் ஒரு பள்ளியில் தாமதமாய் வந்த மாணவர்களை விளையாட்டு மைதானத்தை சுற்றி வாத்து நடை போட சொல்ல அதில் ஒரு மாணவன் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. தவறு செய்யும் மாணவர்களை கண்டிக்கவும் வேண்டும் அதே சமயம் அவர்களை தண்டிக்கும் போது அவர்கள் உடலுக்கோ, உயிருக்கோ எந்த தீங்கும் நேர்ந்து விட கூடாது. தண்டனை கொடுப்பது என்பதே அந்த தவறை மீண்டும் செய்யாமல் தவறை திருத்தி கொள்வதற்காக தான், தண்டனை கொடுத்து அதன் மூலம் மாணவர்கள் உயிரை பறித்து விட கூடாது. 


இதற்கு முன்பு, இது போன்று நம் நாட்டில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் தவறு செய்யும் மாணவனை தண்டிப்பதற்கு அந்த மாணவனை/மாணவியை  சக மாணவர்கள் முன்னிலையில் தண்டனை என்ற பெயரில் மிக மோசமாக நடத்தி அந்த அவமானம் தாங்காமல் வீட்டில் அல்லது விடுதியில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களும் உண்டு.     ஆசிரியர்கள்     இப்படிப்பட்ட 
தண்டனைகளை  மாணவர்களுக்கு கொடுக்கும் முன் தங்கள் வீட்டில் இருக்கும் தங்கள் பிள்ளைகள் தவறு செய்தால் அவர்களை இது போன்று தான் தண்டனை கொடுப்போமா? என்று ஒரு வினாடி இரக்கத்தோடு சிந்தித்திருந்தால் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படுமா? இந்த விஷயத்தை பொறுத்த வரை இன்னும் நம் பள்ளிகளும், ஆசிரியர்களும் இன்னும் பாடம் கற்று கொள்ள தான் வேண்டியதாய் உள்ளது.  

Thursday 11 January 2018

குற்றங்கள் அதிகமாக நடக்கும் ஐந்து நகரங்கள் - எச்சரிக்கை பதிவு


தேசிய குற்ற பதிவுகள் ஆணையம் சென்ற ஆண்டு வெளியிட்ட அறிக்கையின் படி  இந்தியாவில் குற்ற நடவடிக்கைகள் அதிகமாக உள்ள  ஐந்து நகரங்களின் பட்டியல் காணொளி காட்சியாக பகிரபட்டுள்ளது, இந்த நகரங்களுக்கு பயணம் செய்வதாக இருந்தால் எச்சரிக்கையாக இருக்கவும். 


1. டெல்லி - நம் நாட்டில் நடக்கும் நான்கில் ஒரு குற்றம் இங்கு தான் 
நடக்கிறது. 
2. கொச்சி - குற்ற பதிவுகள் - 817.9 ஒரு லட்சம் மக்கள் தொகையில்  
3. இந்தூர் - குற்ற பதிவுகள் -769.1 ஒரு லட்சம் மக்கள் தொகையில்
4. போபால் -  குற்ற பதிவுகள் -  719.5 ஒரு லட்சம் மக்கள் தொகையில்
5. குவாலியர் -  குற்ற பதிவுகள் -  686.1 ஒரு லட்சம் மக்கள் தொகையில்


-----------------------------------------

---------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------------------------- -----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Thursday 4 January 2018

மொபைல் போனில் வரும் மோசடி அழைப்புகள் - எச்சரிக்கை பதிவு



மொபைல் போனில் வரும் மோசடி அழைப்புகள் குறித்த எச்சரிக்கை பதிவு இது, முன்பெல்லாம் உங்கள் மொபைல் எண்ணுக்கு குலுக்கல் முறையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசு பெற தேர்ந்தெடுக்கபட்டுள்ளதாக கூறி எஸ்எம்எஸ் வரும், அந்த பெருந்தொகையை பெற வேண்டுமென்றால் உங்கள் வங்கி கணக்கு விவரங்களை தர வேண்டும் என்பார்கள், ஏமாந்து போய்  வங்கி கணக்கு விவரங்களை தந்தாலோ அல்லது பெருந்தொகையை பெற வேண்டுமென்றால் ஒரு சிறு தொகையை அவர்கள் வங்கிக்கணக்கில் உங்களை டெபாசிட் செய்ய சொல்வார்கள், அவர்கள் சொல்வதை நம்பி டெபாசிட் செய்தால் உங்கள் பணம் மொத்தமும் சுருட்டி விட்டு மாயமாகி  விடுவார்கள். இதெல்லாம் பழசு இப்போது புதிது புதிதாக ஏமாற்ற கிளம்பி இருக்கிறார்கள், அவற்றில் இரண்டு மொபைல் மோசடி  கால்களின் ஒலிப்பதிவை உங்களுக்கு பகிர்ந்துள்ளேன், இது போன்ற மொபைல் அழைப்புகள் உங்களுக்கு வந்தால் எச்சரிக்கையாய் இருங்கள்.           

ஏ டி எம் கார்டு விவரங்களை கேட்டு வரும் மோசடி போன்கால் ஒலிப்பதிவு

உங்கள் மொபைலில்  நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின்  மேலாளர் பேசுவது போல் பேசி டெபிட் கார்ட் லாக் ஆகிவிட்டதாகவோ அல்லது காலாவதி தேதி முடிந்து விட்டதாகவும் கூறி கார்டை மீண்டும் பயன்படுத்த வேண்டுமென்றால் டெபிட் கார்ட் விவரங்களை கூறுங்கள் என்று யாரவது கேட்டால் உஷாராய் இருங்கள், இவர்களிடம் உங்கள்  டெபிட் கார்ட் விவரங்களை தந்தால் உங்கள் வங்கி கணக்கில் நீங்கள் சேமித்து வைத்துள்ள தொகையை மொத்தமாக சுருட்டி விடுவார்கள். (ஆதார் கார்டு விவரங்களை கேட்டு அழைப்பு வந்தாலும், உங்கள் மொபைலுக்கு வரும் ஒடிபி எண்களை கேட்டு அழைப்பு வந்தாலும் கொடுக்க வேண்டாம்)



தகடு தகடு -  பக்தி எந்திரம் விற்கும் மோசடி கும்பல் 
நம் மக்களுக்கு இருக்கும் பக்தி உணர்வை பயன்படுத்தி மோசடி செய்யும் இந்த கும்பலிடம் ஏமாற வேண்டாம். உங்கள் மொபைல் எண் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறி எட்டாயிரம் மதிப்புள்ள பூஜை எந்திரங்கள், பொருட்களை ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு தருவதாக சொல்லி போனில் ஏமாற்ற முயற்சிக்கும் பெண்ணின் உரையாடல், உங்கள் பெயர், முகவரி,எல்லாவற்றையும் வாங்கி கொண்டு வீட்டுக்கு கொரியரில் பார்சல் அனுப்புவதாக கூறுவார்கள், பார்சல் கொண்டு வரும் கொரியர் டெலிவரி நபரிடம் பணத்தை கொடுத்து பார்சலை வாங்கி கொள்ளும்படி கூறுவார்கள், ஏமாந்து பணத்தை கட்டி பார்சலை வாங்கினால் பார்சலில் ஒன்றுக்கும் உதவாத குப்பைகள் இருக்கும்.   


இது போன்ற மோசடிகளில் சிக்கி பணத்தை ஏமாந்து விட்டால் காவல் துறையில் உள்ள சைபர் கிரைம் பிரிவில் புகார் செய்யலாம், ஆனால் இப்படி மோசடி செய்யும் நபர்கள் பொய்யான முகவரியை கொடுத்து தான் மொபைல் எண் (சிம் கார்டு) வாங்கி இருப்பார்கள், உங்களுக்கு அழைப்பு வந்த மொபைல் எண்ணின் முகவரியை கண்டுபிடித்து சென்றாலும் அது போலியாய் இருக்கும், ஆகவே இந்த மொபைலில் வரும் மோசடி அழைப்புகள் குறித்து ஆரம்பத்திலேயே எச்சரிக்கையாய் இருப்பது நல்லது.    
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Thursday 28 December 2017

பிக்பாக்கெட்டிலிருந்து உங்கள் பர்சை பாதுகாக்க ஐந்து எச்சரிக்கை டிப்ஸ்


பெரும்பாலும் பிக்பாக்கெட் அல்லது பொருட்கள் திருடுபவர்கள் அங்கே பாருங்க கீழே பணம் கிடக்குது, கர்சீப், வாட்ச் அல்லது நகை கிடக்குது என்று சொல்லி உங்கள் கவனத்தை திசை திருப்பி நீங்கள் அசரும் நேரத்தில் உங்களிடம் உள்ள பொருட்களையோ, பணத்தையோ திருடி விடுகின்றனர். பெரும் பணம் அல்லது விலையுயர்ந்த நகைகள் அணிந்து வெளியில் செல்லும்போது இப்படி யாராவது உங்கள் கவனத்தை திசைதிருப்ப முயற்சித்தால் எச்சரிக்கையாய் இருங்கள். 

5. பின்பக்க பாக்கெட்டில் பர்ஸ் வைப்பதை தவிர்க்கவும். பெரும்பாலும் திருடர்கள் உங்கள் கவனத்தை திருப்பி பின்பக்க பாக்கெட்டில் வைக்கபட்டிருக்கும் பர்ஸ், பொருட்களை எளிதாக திருடி விடுகின்றனர்.

4. நீங்கள் தோளில் மாட்டி செல்லும்  பையை உங்கள் கையால் உடலோடு அணைத்தபடி எடுத்து செல்வது நல்லது. லேசாக பையை யாராவது எடுக்க முயன்றாலும் சட்டென்று தெரிந்து விடும்

3 வெளியூர்களில் ஓட்டல்களில் தங்கும்போது விலையுயர்ந்த பொருட்களை பாதுகாப்பு லாக்கரில் வைத்து பூட்டி விட்டு செல்வது நல்லது.  

2 வெளியே செல்லும்போது செலவுக்கு எவ்வளவு பணம் தேவைப்படுமோ அதை மட்டும் எடுத்து செல்வது நல்லது. தெரியாத ஊரில் நகைகளையோ, பொருட்களையோ, பெரும் தொகையையோ செல்லும் இடங்களுக்கு எல்லாம் கையோடு  எடுத்து செல்வது நல்லதல்ல. 

1. பயணம் செய்யும்போது பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை பாதுகாக்க அவற்றை மணி பெல்ட்டில் வைத்து  அணிந்து செல்லலாம், மணி பெல்ட் வைத்திருக்காதவர்கள் பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை உள் பாக்கெட்டில் வைத்து எடுத்து செல்லலாம்.

போனஸ் டிப்ஸ்: உங்கள் பை அல்லது சூட்கேஸ் போலவே பலரும் வைத்திருந்தால் உங்கள் பையில் அல்லது சூட்கேஸில் மார்க்கர் பேனா கொண்டு எதாவது ஒரு அடையாள குறி அல்லது உங்கள் இனிஷியல் போட்டு வைத்து கொள்ளுங்கள். இது உங்கள் பையை யாரும் மாற்றி எடுத்து செல்லாமல் தவிர்த்திடும்.    

-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Wednesday 20 December 2017

யானையை சீண்டிய இளைஞர்களை தேடும் வனத்துறை


நேற்று கோவை மாவட்டத்தில் தடாகம் என்ற பகுதியில் இளைஞர்கள் சிலர் யானை ஒன்றை சீண்டும் காணொளி காட்சி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு  வைரல் ஆகி கொண்டிருந்தது.



ஆஸ்பெஸ்டாஸ் கூரை போடப்பட்டிருக்கும்  அந்த இடத்தில் இளைஞர் யானையை சீண்டுவதையும், யானை   ஆவேசமடைந்து    அங்குமிங்கும்    அவரை    துரத்தி ஓடுவதையும் அந்த இளைஞரின் நண்பர் படம் பிடித்துள்ளார். இப்போது அந்த இளைஞர்களை வனத்துறையினர் தேடி கொண்டிருக்கின்றனர்.   யானையை உட்பட காட்டு விலங்குகளை  துன்புறுத்தினால்   ஏழு   ஆண்டு   வரை   சிறை தண்டனை விதிக்க முடியும் என்று சட்டம் உள்ளது. 



ஏற்கெனவே சென்ற மாதம் கேரளா மாநிலத்தில் யானை ஒன்றின் மேல் பாகுபலி படத்தில் வருவது போல் ஏற முயன்ற இளைஞர் ஒருவரை யானை தூக்கி வீசும் காணொளி காட்சி வைரல் ஆனது. அந்த இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, எவ்வளவு தான் பட்டாலும் திருந்த மாட்டார்கள் போல் இருக்கிறது.